உக்ரேன் போரை முன்னிட்டு ரஷ்யாவிற்கு சில்லறை தயாரிப்புகள் மற்றும் பிரைம் வீடியோ வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15 ஆவது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரேன் மீதான போரை முன்னிட்டு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனமும் தங்களது செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து டிக் டாக் நிறுவனம் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டில் டிக் டாக் நேரடி ஒளிபரப்பை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் தங்களது ஒளிபரப்பு சேவையை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்ட அமெரிக்க பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் ரஷ்யாவில் தங்களது அனைத்து விதமான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அமேசான் நிறுவனம் ரஷ்யா மற்றும் பெலாரஸை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சில்லறை தயாரிப்பு வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பிரைம் வீடியோவுக்கான அணுகலையும் இனி நாங்கள் வழங்க மாட்டோம் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.