ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரும் காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சில பேர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் காவல்துறையினருடன் இணைந்து அந்த பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதாவது புல்வாமாவின் நைனா பேட்புரா எனும் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதன்பின் அந்த பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். அவ்வாறு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி யார்..? எந்த அமைப்பை சேர்ந்தவர்…? என்பது தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.