மத்தியபிரதேசம் ஜபல்பூரில் சஞ்சீவனி நகரிலுள்ள ஓரியண்டல் கல்லூரி அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததால், அவர்களை காவல்துறையினர் வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த சிறுவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் அவர்களை துரத்தி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் அவர்களிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் பட்டன் கத்தி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் சிறுவர்களை உடனே கைது செய்ததோடு, அவர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் 2 நாட்டுத்துப்பாக்கிகள், 1 இரட்டைக் குழல் துப்பாக்கி, 8 வாள்கள், கத்திகள், மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, கைதான சிறுவர்களில் ஒருவருக்கு வயது 16, மற்றவருக்கு 15 ஆகும். இதில் ஒருவர் 4ம் வகுப்பு வரை படித்துள்ளார், மற்றவர் 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர்கள் 2 பேரும் சமூக ஊடகங்களை பார்த்து துப்பாக்கி தயாரிப்பதைக் கற்றுக் கொண்டுள்ளனர்.
இதில் 15 வயது சிறுவன் தன் வீட்டில் வைத்து ஆயுதங்கள் தயாரித்ததை ஒப்புக்கொண்டான். அவனது தந்தை ஒரு எலக்ட்ரீஷியன் எனவும் பகலில் வேலைக்குச் சென்ற பின் ஆயுதங்களைத் தயாரிக்க அவரது கருவிகளைப் பயன்படுத்தியதாகவும் சிறுவன் கூறியுள்ளான். அதுமட்டுமல்லாமல் ஏசி குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் செப்புக் குழாய்களை சிறிய துண்டுகளாக வெட்டி, தீக்குச்சிகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொடியை நிரப்பி தோட்டாக்களை சிறுவர்கள் தயாரித்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.