Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் 1000 கோடி செலவில் பர்னிச்சர் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் திறப்பு…..!!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.7) அடிக்கல் நாட்டுகிறார். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூபாய் 1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் “சர்வதேச அறைகலன் பூங்கா” (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என்று கடந்த வருடம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இப்பூங்கா அமைப்பதற்கு சிப்காட் நிறுவனத்தின் சார்பாக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் நிலம் சரிசெய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பர்னிச்சர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையிலுள்ள மாணிக்கம் மகால் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 7) காலை 10 மணியளவில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க இருகிறார். இதற்கிடையில் பர்னிச்சர் தொழிலுக்கென தனியாக நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக அமைக்கப்படும் இந்தப் பூங்காவில் மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் இடம் பெறுகின்றன. மேலும் இப்பூங்காவில் பர்னிச்சர் தொழில் சார்ந்த உதிரி பாகங்களை தயார்செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்னிச்சர் தொழில் குறித்து வருடந்தோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் அடிப்படையில் பயிற்சிக்கூடம், பர்னிச்சர் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், தங்கும் விடுதிகள்,ஹோட்டல்கள் ஆகிய அனைத்து வசதிகளும் அங்கு இடம்பெறும். இந்த பூங்கா வாயிலாக சுமார் ரூபாய் 4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 மெகாவாட் திறன் கொண்ட நீரில் மிதக்கும் சூரியமின்சக்தி நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி மாநகராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை முதல்வர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதனை தொடர்ந்து மாலை வேளையில் நாகர்கோவில் செல்லும் முதல்வர் அங்கு மழை வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

Categories

Tech |