மாணவர்களின் தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆகாமல் தடுக்க மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, ஒமைக்ரான் பரவல் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சமூகவலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.
வினாத்தாள்கள் லீக் ஆன விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் 10,12ஆம் வகுப்பு தேர்வு களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள்கள் லீக் ஆகாமல் தடுப்பதற்காக மூன்று வகை வினாத்தாள் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இரண்டாம் திருப்புதல் தேர்வு வரும் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 தேதி முடிவடைகிறது ஒருவேளை வினாத்தாள் லீக் ஆனால் மாற்று வினாத்தாளை தேர்வில் வழங்க முடிவு செய்துள்ளனர்.
அதே நேரம் மூன்று வகை வினாத்தாள்களும் ஒரே நேரத்தில் வெளியாகாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.