தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் (04.03.2022) இன்று நடைபெற்றது.
இதில் உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவி இடங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதுடன் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.