தமிழகத்தில் நியாய விலை கடை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ,87,79,182 பயனாளிகளும், 2,19,84, 854 குடும்ப அட்டைகளும் உள்ளன.
மேலும் தமிழகத்தில் 39 மாவட்டங்களில் மொத்தம் 34 ,773 நியாயவிலைக் கடைகளும், 244 கிடங்குகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுகளில் இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் அத்தியாவசிய பொருள்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.