நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பையும் அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அதிகாரத்தில் அமைந்துள்ளது. இது தொடர்ந்து நகை கடன் தள்ளுபடி குறித்த 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அ.தி.மு.க ஆட்சியின்போது நகை கடன் வழங்குவதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இத்திட்டத்தின்கீழ் தகுதியானவர்களை தேர்வு செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கடன் வாங்கி இருப்பதாக பயிர் கடன் பெற்றவர்கள், வெவ்வேறு வங்கிகளில் 5 சவரனுக்கு மேல் நகை கடன் பெற்றவர்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தி.மு.க.வை சேர்ந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியபோது, கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி தகுதியானவர்களுக்கு இறுதி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயனாளிகள் அறிந்துகொள்ள வேண்டிய வகையில் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் அந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும்.
2020 ஆம் ஆண்டிற்கான ஜனவரி 31-ம் தேதி வரை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆய்வு செய்து அவர்களுக்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.