கெலவரப்பள்ளி அணையில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
ஓசூர் கெலவரப்பள்ளி அணை நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிஅவர்களால் 2-ம் போக பாசனத்திற்காக 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது.ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த தண்ணீர் திறப்பு விழாவில் கலெக்டர் பேசியதாவது, ஓசூர், சூளகிரி தாலுகாவில் தட்டகானபள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, அட்டூர், கதிரேபள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனபள்ளி, தொரப்பள்ளி, திருச்சிபள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகுள்ளு, பெத்த குள்ளு, சாமனபள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி உள்ளிட்ட 22 கிராமங்களும், 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களும், இந்த அணை முலம் பயன் அடைகின்றன.
மேலும் கெலவரப்பள்ளி அணைக்கு வருகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் பத்து நாட்களுக்கு முதலில் தண்ணீர் திறந்துவிடப்படும். அதனை தொடர்ந்து 5.நாட்களுக்கு தண்ணீைர நிறுத்தியும், 6 நனைப்புகளுக்கு மீண்டும் தண்ணீர் வழங்கப்படும்.பொதுப் பணித்துறையினருடன் விவசாயிகள் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற வேண்டுமென்று அவர் கூறினார். கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அந்த சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.