அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு சுயேச்சை கவுன்சிலர்கள் மூன்று பேரை திமுகவினர் காரில் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆறு இடங்களும் திமுக கூட்டணிக்கு ஏழு இடங்களும் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் செந்தில், பாரதி ஜெயக்குமார், மோனிஷா, சரிதா, சாந்தி, சிந்தாமணி ஆகிய ஆறு சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தனர். மொத்தம் ஒன்றியத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆகும்.
ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்ற குறைந்தபட்சம் 10 பேரின் ஆதரவு தேவை என்பதால், இங்கே சுயேச்சைகளின் ஆதரவின்றி யாரும் தலைவர் பதவிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திட்டம் தீட்டிய திமுக, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்குப் பின் சுயேச்சை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மூவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.