காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியில் நாராயணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் சேகர் என்பவர் இரவுநேர காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்குவாரிக்கு வேலைக்கு சென்ற பணியாளர்கள் ரத்தவெள்ளத்தில் சேகர் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சேகரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சேகரின் அண்ணன் மகனான அண்ணாமலை என்பவர் அந்த பகுதியை கடந்து சென்றது பதிவாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் கல்குவாரி அலுவலகத்தின் பின்புறம் இருந்த அண்ணாமலையின் இடத்திற்கு சென்று அவரை கவ்வி பிடித்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அண்ணாமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.