வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் அஜித் ரசிகர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் திரையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த திரையரங்கில் நேற்று நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஆனால் நிறைய பேருக்கு டிக்கெட் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் வலிமை படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென படம் பாதியில் நின்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு தியேட்டர் ஊழியர்கள் டெக்னிக்கல் பால்ட்டு காரணமாக படம் பாதியிலேயே நின்றுவிட்டது என கூறியுள்ளனர். இருப்பினும் அதனை ஏற்காத ரசிகர்கள் திரையரங்கின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தியேட்டர் ஊழியர்கள் வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் தியேட்டர் ஊழியர்கள் டெக்னிக்கல் பால்ட்டை சரி செய்து படத்தை முழுமையாக திரையிட்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் போராட்டத்தை கைவிட்டு படத்தை மகிழ்ச்சியோடு பார்த்து விட்டு சென்றுள்ளனர்.