ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது.ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகளை மறிப்பவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா ராணுவ தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் இருந்து செயல்படும் இணையதளங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்யாவின் இந்த தாக்குதலால் மாஸ்கோ வர்த்தக சந்தை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.