குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் பவானி-வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.