சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் நோட்டக்காரன் புளியமர தெருவில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் 2 மகன்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறனர். இதனையடுத்து குபேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. மேலும் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் வாடியதால் கணவன் மனைவி இருவரும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து வாழ்வில் விரக்தியடைந்த கணவன்-மனைவி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கூடலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குபேந்திரன் மற்றும் சுந்தரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.