தி.மு.க கட்சியின் உறுப்பினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் ஏ பிளாக் பகுதியில் மதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் தனது மோட்டார் சைக்கிளில் எஸ்.எம். நகருக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை சில மர்ம நபர்கள் மறித்து அவரை கத்தியால் குத்தி பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதனை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் காந்தி நகர் ஏ பிளாக் பகுதியில் வசித்து வரும் வினோத் குமார் என்பவரின் தாயாருடன் மதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார் தனது நண்பர்களுடன் சென்று மதனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உசேன், கணபதி, வினோத்குமார், நரேந்திரன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் 3 நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.