தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.
இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 18வது வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், முதல் சுற்றில் 4 வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டது. அதில் 2 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 3-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலமுருகன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர்களால் அறிவிப்பு வெளிவந்தது. இதனைக் கேட்டதும் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அதன்பின் உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஆண்டிபட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.