சட்ட விரோதமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் பணிகளில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 35 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்-இன்ஸ்பெக்டர்கள், 700 காவல்துறை அதிகாரிகள், 200 ஊர்க்காவல் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பதற்றமான 37 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 17 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து 30 வாகனங்களில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.