12-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது .
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் வருகின்ற மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்குபெறும் இப்போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஐசிசி நேற்று அறிவித்துள்ளது.இப்போட்டிக்கான மொத்த பரிசுதொகை ரூபாய் 26 ½ கோடி ஆகும்.
இது முன்பு நடந்த உலக கோப்பை போட்டிக்கான பரிசுத்தொகையை விட 75 சதவீதம் கூடுதல் ஆகும். இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ஏறக்குறைய ரூபாய் 10 கோடி வழங்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியை ஒப்பிடும் போது இது ஒரு மடங்கு அதிகமாகும். அதேசமயம் 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூபாய் 4 ½ கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூபாய் 2 ¼ கோடி பரிசாக வழங்கப்படும். அதேபோல் லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூபாய் 19 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும்.