மகன் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பூவரசன் என்ற மகனும், 2 வயதில் நித்தியா என்ற மகளும் மற்றும் 8 மாத வேத ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த வருடம் மணிகண்டனை திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் துறையினர் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதற்கிடையே மணிகண்டனின் மகன் பூவரசன் உடல்நலக்குறைவால் கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த கல்பனா திடீரென தனது மகள் நித்தியாவை தனது உறவினர் வீட்டிலும், கைக்குழந்தையை எதிர்வீட்டிலும் விட்டுவிட்டு கல்பனா திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் கல்பனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது உடல் கருகிய நிலையில் கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்பனாவின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.