குடும்ப தகராறில் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேப்பதுறை பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போர்வெல் லாரி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஞானஜோதி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் விநாயகம் என்ற மகனும், 1 1\2 வயதில் இளமதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 8-ஆம் தேதி இருவரிடையே ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த ஞானஜோதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானஜோதியின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து பிரசாந்த் மேப்பதுறைக்கு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறையினர் மேப்பதுறைக்கு சென்று பிரசாந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த பிரசாந்த் விசாரணைக்கு பயந்து அவரது நிலத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அங்குள்ள பிரசாந்தின் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கலசபாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.