மர்ம நபர்கள் பெயிண்டரை வெட்டி கொலை செய்து தலையை கோவில் வாசலில் வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலுவபள்ளி கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பிரதீப் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் பிரதீப்பை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் அவரது தலையை துண்டித்து அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் வாசலில் வைத்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனை அடுத்து மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள் பிரதீப்பின் தலை துண்டிக்கப்பட்டு கோவில் வாசலில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விவசாய நிலத்தில் கிடந்த பிரதீப்பின் உடல் மற்றும் கோவிலில் கிடந்த தலையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.