15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . குறிப்பாக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகிய வீரர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
அதே சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடர் ஏப்ரல் 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஐபிஎல்-லில் பங்கேற்பார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது. அதே போல் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டு போட்டிகளில் விளையாட உள்ளது.
இத்தொடர் மார்ச் 18-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.இதனால் வங்காளதேச போட்டி தொடர் முடிந்ததும் தங்கள் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள் என்பதை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் சுட்டி காட்டியுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதால் இவ்விரு அணி வீரர்களும் ஓரிரு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாது.