சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரையும், உதவியாக இருந்த அவரது தந்தையையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் வசிக்கும் பெண் தனது 16 வயதுடைய மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சேர்ந்த கட்டிட தொழிலாளியான முருகேசன் என்பவர் சிறுமியுடன் வெள்ளோடு காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டார்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 8 மாதங்களாக முருகேசன் சிறுமியை காதலித்தது தெரியவந்துள்ளது. அதன்பின் முருகேசன் சிறுமியை கடத்தி சென்று தனது தந்தையின் உதவியுடன் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து முருகேசன் மற்றும் அவரது தந்தை ரத்தினம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.