முதலமைச்சர் கணினித் தமிழ் விருது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உலகமெல்லாம் கணினி வழி தமிழ் மொழியை பரவச் செய்யும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுபவருக்கு ஒரு சவரன் தங்க பதக்கம் மற்றும் தகுதியுரை, விருது தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
அந்த வகையில் 2021-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து வரவேற்கப்பட்டு விருதுக்கான விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய இறுதி நாள் 31.12.2021 என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் காலத்தை தமிழக அரசு 28.02.2022 வரை நீட்டித்துள்ளது.
அதேபோல் 2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மென்பொருள்களை தான் இந்த போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் ( www.tamilvalarchithurai.com ) இந்த விருதிற்கு உரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. தமிழ்வளர்ச்சி இயக்கத்திற்கு விருதுக்கான விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 28.02.2022
2. விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி – தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர் சென்னை- 600 008
3. தொடர்புக்கான தொலைபேசி எண்கள்/ மின்னஞ்சல் முகவரி: 044-28190412/ 044-28190413 [email protected] என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.