சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இதில் பங்கேற்க பல நாடுகளில் இருந்து வீரர்கள் வந்திருக்கிறார்கள். அதில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து வந்த பனிச்சறுக்கு துப்பாக்கி சூடு வீராங்கனையான வலிரீயா வாஸ்நெத்சோவா என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட மோசமான உணவின் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, கொரோனா தொற்று ஏற்பட்ட பிற நாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு இதுதானா?
தொடர்ந்து ஐந்து நாட்களாக மூன்று நேரங்களும் இது தான் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே நான் இளைத்துப் போய்விட்டேன். உணவு சரியாக கொடுக்கப்படாததால் சோர்வாக இருக்கிறேன். விளையாட்டு வீரர்களுக்கு என்று தனியாக உணவு பழக்கம் இருக்கிறது. நிர்வாகம் அதனை செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்நிலையில் ரஷ்ய அரசு இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து கூறிய ரஷ்ய செய்தி தொடர்பாளரான செர்கெய் அவெர்யானொவ், வீராங்கனைக்கு தகுந்த உணவு கொடுப்பதை உறுதி செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.