ஆந்திர மாநிலத்தில் பிரம்மாண்ட கோயில் கோபுரம் சாலை விரிவாக்கப் பணிக்காக எவ்வித சேதமும் இன்றி பின்னோக்கி நகர்த்தப்பட்டது.
கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற மஹாலக்ஷ்மி கோவில் ஒன்று நெடுஞ்சாலையை ஒட்டி கட்டப்பட்டது. 52 அடி உயர கோவில் கோபுரத்தின் மீது 23 அடி உயர பிரம்மாண்ட லலிதா காமேஸ்வரி சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் அனந்தபுரத்தில் தற்போது நடைபெற்று வருவதால் பிரசித்தி பெற்ற கோவிலை இடிக்க வேண்டும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியுற்ற கோவில் நிர்வாகத்தினர் கோவிலை இடிக்காமல் பின்னோக்கி நகர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.கோவில் கோபுரத்தின் எடை 500டன் இருக்கும் நிலையில் அதை பின் நோக்கி நகர்த்துவது என்பது எளிதான காரியமல்ல என்பதை உணர்ந்த அவர்கள், விஜயவாடாவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தை நாடினர்.அதன்படி கோவிலுக்கு எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் ஜெர்மன் தொழில் நுட்பத்தின் மூல் ஜாக்கிகளை கொண்டு பின்னோக்கி நகர்த்துவதாக முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கோயில் கோபுரத்துக்கு கீழே பூமியில் 20 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி கோபுரத்துக்கு அடியில் 350 ஜாக்கிகள் பொருத்தப்பட்டன. பின் கோபுரம் 6அடி தொலைவுக்கு சிறிது சிறிதாக பின்னோக்கி நகர்த்தப்பட்டது. இவ்வாறாக எந்த சேதாரமும் இன்றி,ரூ.40 லட்சம் செலவில் கோவில் கோபுரம் பின்னோக்கி நகர்த்தப்பட்டது. இதை கண்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஆச்சரியத்துடன் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.