பெண் தனது 6 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் கோபால்- மரகதம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 6 பிள்ளைகளுடன் வந்த மரகதம் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் மரகதம் கூறியதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது கணவர் கஞ்சா விற்பனை செய்ததாக கூறி அன்னதானபட்டி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பலமுறை முயற்சித்தும் எனது கணவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் போதிய வருமானம் இன்றி எனது குழந்தைகளுடன் நான் கஷ்டப்பட்டுகிறேன். எனவே எனது கணவருக்கு ஜாமீன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரகதம் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.