பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள தேவிபட்டணம் பகுதியில் தையல் தொழிலாளியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஈஸ்வரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரன் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் ஓடை பாலம் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து கீழே தவறி விழுந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஈஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.