லாரி மீது கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் பகுதியில் குபேந்திரன்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹாலோ பிரிக்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் உறவினர் ராஜேந்திரசிங்கின் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குபேந்திரன்சிங் மற்றும் அவரின் குடும்பத்தினர் வாடகைக் காரில் சென்று கொண்டிருக்கும் போது பங்களாமேடு அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற நிலையில் அவ்வழியாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் குபேந்திரன்சிங் மற்றும் அவரின் மனைவி, மகன், உறவினர்கள் என 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குபேந்திரன்சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.