இலங்கை அரசு, தீவிரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தும் கொண்டுவர தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 1979 ஆம் வருடத்தில் தீவிரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தீவிரவாத செயலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களை வாரன்டின்றி கைது செய்வதற்கும், அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமை கவுன்சில் மற்றும் ஐரோப்பிய யூனியன், இந்த சட்டமானது மனித உரிமையை மீறும் விதத்தில் உள்ளது, என்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ற வகையில் இதனை மாற்றம் செய்யுமாறும் வலியுறுத்தி கொண்டிருக்கின்றன. இதனையடுத்து இலங்கை அரசு சர்ச்சைக்கு உரியதாக இருக்கும் தீவிரவாத தடுப்புச் சட்டம் திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது.
அதாவது சந்தேகிக்கும் வகையில் இருக்கும் நபர்கள், தங்களின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். மேலும், சிறையில் இருக்கும் நபர்கள் சட்ட ஆலோசனை பெறுவதற்கும், குடும்பத்தினரை சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. தண்டனை காலமும் 18 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.