கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இதையடுத்து கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நியோ கோவ் (NeoCov) என்ற புதிய வகை கொரோனா வைரஸை சீனாவின் வூஹான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது அதிக மரணத்தை ஏற்படுத்தும் (3-ல் ஒருவர் உயிரிழப்பர்) MERS-COV வகை வைரஸின் தீவிரத்தையும் SARS-COV கொரோனா வைரசின் வேகமான பரவும் திறனையும் கொண்டுள்ளது. இதற்கு எதிராக எந்த தடுப்பூசியும் செயல்படாது என்று எச்சரித்துள்ளனர். தற்போது இது தென்னாப்பிரிக்காவில் வௌவால்களிடம் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இன்னும் பரவ தொடங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.