திமுக ஐடி விங் செயலாளராக பதவி வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பிடிஆர் பதவி விலகியது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஐடி விங் உடன்பிறப்புகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் “கடந்த 2 தினங்களாக என்னை தொடர்பு கொண்டு எனது எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்களையும், இதுவரை நான் ஆற்றிய பணிக்கு நன்றியையும், நான் பதவி விலகியது குறித்து வருத்தத்தையும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நம் பிணைப்பு தாய் பிள்ளை உறவு போன்றது. எனவே யாரும் வருத்தப்பட வேண்டாம். அதேபோல் எதுவுமே நிரந்தரம் கிடையாது கண்டிப்பாக ஒருநாள் பதவி எடுத்து கொள்ளப்படும். இருப்பினும் நான் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஒரு அங்கமாகவே இருப்பேன்” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.