தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில்,அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆறாவது இலக்காகி இருக்கிறார். வருமானத்திற்கு கூடுதலாக 11.32கோடி ரூபாய் சொத்து குவித்ததாக அவருக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.11.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.6 கோடி ரொக்கம், 6.6 கிலோ தங்கம், 13.9கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.