வீடுகள் மற்றும் கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் கடந்த 15-ஆம் தேதி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் 4 மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி, தங்க பொட்டு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடுமலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அந்த விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு பகுதியில் வசிக்கும் மூர்த்தி, வேலன், மடத்துக்குளம் போத்தநாயக்கனூர் பகுதியில் வசிக்கும் மூர்த்தி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.