இந்தியா முழுவதும் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி, நீதிபதி கேசவேலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2019ஆம் ஆண்டு வரை காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டது.
அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு பொறுத்தவரை 11,181 பணிகளுக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டு காவல் துறை ஆய்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டியுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் மாநில பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டுக்கான குறித்த அறிவிப்பு வெளியிடுவது குறித்தும், 2020ஆம் ஆண்டு காலத்திலும் இருப்பது குறித்த நடைமுறை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.