தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. எனவே கொரோனா பரிசோதனை ஆய்வுகள் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கொரோனா சோதனை கட்டணம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக இருப்பது கொரோனா பரிசோதனைக்கு ஒரு தடையாக இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
அதாவது மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா சோதனை கட்டணம் ரூ.500-க்கு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் தனிப்பட்ட முறையில் அரசு ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு கட்டணம் ரூ.550 என்று வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை கட்டணம் ரூ.900-ஆக வசூலிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா சோதனை கட்டணம் ரூ.600-ஆக உள்ளது. எனவே தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு இணையாக கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500-ஆக குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.