தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது, டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனியும் மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மது வாங்க வருவோர் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இரண்டு பேருக்கு இடையில் 6 அடி இடைவெளி கட்டாயம். கடைகளுக்கு முன் கூட்டமாக இருக்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.