துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முக்கியமான 4 கோப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் கோப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய கோப்புகளை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக புதுச்சேரி அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்த 4 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் ஆளுநர் அளித்துள்ளார்.
அதன்படி மத்திய ஆயுஷ் துறையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு இணையாக, புதுச்சேரி இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மருத்துவ அதிகாரிகளின் பணிஓய்வு பெறும் வயதினை 60 ல் இருந்து
65-ஆக உயர்த்தும் கோப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது .
2021-22 நிதியாண்டில் ஊதியம் வழங்குவதற்காக PRTC நிறுவனத்திற்கு நிதி மானியத்தின் 5-வது தவணையாக ரூ. 1.17 கோடி நிதி அளிக்கும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி தொழில்துறை சட்டம் 1941-இன் கீழ் மின்துறைச் சேவைகளை பொதுப் பயன்பாட்டுச் சேவையாக 19.1.2022 முதல் 18.7.2022 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 2021, 2022-க்கான முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் வழங்க ரூ. 39.72 கோடிக்கான செலவின ஒப்புதல் ஆகிய நான்கு கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.