பஞ்சமி நிலங்களில் முறைகேடாக பட்டா பெற்று பயன்படுத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசப்பாடி கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக 120 ஏக்கர் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கொண்டுவரப்பட்ட நிலசீர்திருத்த சட்டத்திற்கு பிறகு கிராமத்தில் குடியேறிய ஆதிதிராவிடர் அல்லாத 32 நபர்கள் பஞ்சமி நிலங்களை சட்ட விரோதமாக கைப்பற்றி 1980-1990-ம் வருட கால கட்டங்களில் முறைகேடாக பட்டா பெற்று கடந்த 40 வருடங்களாக பயன்பெற்றுள்ளனர்.
இது பற்றி பூசப்பாடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முறைகேடாக பெற்ற 32 பட்டா தாரர்களின் பட்டாக்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து நில ஆவணங்களில் பஞ்சமி நிலங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மீட்கப்பட்ட பஞ்சமி நிலங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதில் தனி நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்ட 30 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியையும் அவர் ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் என கண்டறியப்படும் அனைத்து நிலங்களும் உரிய விசாரணை மற்றும் பரிசீலனைக்குப் பின் மீட்கப்பட்டு ஆதி திராவிட இன மக்களுக்கு வழங்கப்படும். மேலும் பஞ்சமி நிலங்களை முறைகேடாக பட்டா பெற்று பயன்படுத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.