15 அடி ஆழ தொட்டிக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன . இந்நிலையில் கூடலூர் சில்வர் கிளவுட் தனியார் எஸ்டேட் 2-வது டிவிஷன் பகுதியில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த 15 அடி தொட்டிக்குள் உறுமல் சத்தம் வருவதை கேட்ட தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தொட்டிக்குள் சிறுத்தை ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அந்த சிறுத்தை ஆக்ரோஷமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் மரக்கட்டைகள் மூலம் ஏணி அமைத்து அதனை அந்த தொட்டிக்குள் வைத்தனர். அதன் பிறகு சிறிது தூரத்தில் நின்று கொண்டு வனத்துறையினர் சிறுத்தையை கணித்துள்ளனர். அப்போது ஏணி வழியாக மேலே ஏறி வந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.