மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உப்புகுட்டை பகுதியை சேர்ந்த தசரதன் என்பவர் சென்றுள்ளார். இவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தசரதனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தசரதன் கூறியதாவது, சென்னை பள்ளி கல்வி துறையில் வேலை பார்க்கும் ஒருவரும், கிருஷ்ணகிரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரும் இணைந்து இளநிலை உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி என்னிடம் 7 லட்ச ரூபாயை வாங்கியுள்ளனர்.
ஆனாலும் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் அவர்கள் திருப்பி தரவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி 50 ஆயிரம் ரூபாயை வாங்கி தந்தனர். ஆனால் மீதி பணத்தை இதுவரை அவர்கள் திருப்பி தரவில்லை. இதனால் வேலை இல்லாமலும், கடன் தொல்லையாலும் நான் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே எனது பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.