புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மும்பை முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மும்பை காவல்துறையினர் அனைவருக்கும் நாளை விடுமுறை தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து காவல் துறையினரும் நாளை பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக மும்பை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, தாதர், பாந்த்ரா, சர்ஜ்கேட் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.