பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான மண்டப வளாகத்தில் கோவிலில் பிச்சை எடுத்து வந்த கணவன்-மனைவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பிச்சை எடுக்கும் வேல்முருகன், அவரது மனைவி ராமு என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் 2 தினங்களுக்கு முன்பு ராமு பிச்சை எடுத்து கொண்டிருக்கும் போது உடன் பிச்சை எடுக்கும் மற்றொரு நபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நபர் ஆத்திரத்தில் வேல்முருகன் மற்றும் அவரது மனைவியை அடித்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனைதொடர்ந்து தலைமறைவான பிச்சைகாரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.