சமீபத்தில் பெண்களின் திருமண வயதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 18-லிருந்து 21-ஆக உயர்த்தியது. இதற்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தேமுதிக வரவேற்கிறது.
மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கை அடங்கியுள்ளதால், மத்திய அரசு தீர்க்கமான நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஓட்டுரிமை 18 வயதில், திருமணத்திற்கு 21 வயதா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோன்று ஆண்களுக்கான திருமண வயது 21 தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே ஆண்களுக்கான வயது வரம்பில் மாற்றம் வருகிறதா? என்பது குறித்து மத்திய அரசு தெளிவு செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.