தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கால் பதித்து விட்டது. ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில், நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் விளக்கி கூறினர்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் பேசியதாவது “இந்தியாவில் இதுவரையிலும் 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கையில், 40 சதவீதம் பேர் கேரள மாநிலத்தில் உள்ளனர். சர்வதேச அளவில் இந்தியாவில்தான் கொரோனா தடுப்பூசி விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 91 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பயன் உள்ளதாக இல்லை என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று அவர் கூறினார். இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறியதாவது “தற்போது அத்தியாவசியமற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும் பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.