பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் அச்சுறுத்தலால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயலால், அங்குள்ள சூரிகாவோ டெல் நோர்டே என்ற மாகாணத்திற்கு கிழக்கில் சுமார் 175 கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு மணி நேரத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசி இருக்கிறது. மேலும், வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்வதால் தினகட் தீவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அங்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், கடலோரப் பகுதிகள், தாழ்வான பகுதிகள், நிலச்சரிவு ஆபத்து இருக்கும் பகுதிகள் மற்றும் கடல் அலைகள் அதிகம் எழும்பும் இடங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. புயல் செல்லக்கூடிய வழியில் சுமார் 10,000 கிராமங்கள் இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
எனவே அபாயகரமான இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று வெளியேற்றப்பட்டு பத்திரமான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் கடல் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டதில், சுமார் 45,000-த்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.