மாணவர் மீது ஆசிரியர் தாக்குதலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கோவை கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியில் சீருடை வழங்கப்பட்டது. அதை அணிந்து பார்த்த போது பெரியதாக இருந்தது. இதனால் தனது தாயிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்புக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் மாணவனை எழுப்பி எதற்கு இவ்வளவு இறுக்கமாக சட்டை அணிந்துள்ளாய் என்று கேட்டார். பெரியதாக இருந்தது அதனால் நான் சரியான அளவிற்கு தைத்துக் கொண்டேன் என்று கூற அதில் கோபமடைந்த ஆசிரியர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து வலி தாங்க முடியாத மாணவர் அலறி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அருகில் வகுப்பிலிருந்து ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவனை மீட்டனர். மாணவனுக்கு கை, காது, மூக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து மாணவன் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் பள்ளிக்கு வந்து மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன.ர் இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவர் மீது ஆசிரியர் தாக்குதலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓ.பன்னீர்ச்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்கள் நலன் பேணவும், ஆசிரியர் – மாணவர் நல்லுறவு பேணவும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.