எண்ணெய் கசிவின் காரணமாக விவசாய நிலங்கள் நாசமாகிவிட்டதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நைஜரில் உள்ள பாயல்சா மாகாணத்தில் சாண்டா பார்பரா என்ற ஆற்றுப்படுகை உள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் தனியார் கச்சா எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. அதிலும் எண்ணெய் கிணற்றின் மேல் பகுதியில் உள்ள குழாய்களிலிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக எண்ணெய் கசிவாகியுள்ளது.
இந்த எண்ணெய் கசிவானாது சிறு ஆறுகள் வழியாக நைஜர் டெல்டாவின் விளைநிலங்களை நாசமாகியுள்ளது என்று மக்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அரசையும் அந்த எண்ணெய் நிறுவனத்தையும் வன்மையாக கண்டித்து பல்வேறு குழுவினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது எண்ணெய் கசிவானது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சரான டிமிப்ரே சில்வா தெரிவித்துள்ளார். மேலும் எண்ணெய் கிணற்றின் குழாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல வருடங்களாக எண்ணெய் கசிவினால் நைஜர் டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது சாண்டா பார்பரா பகுதியில் ஏற்பட்ட கசிவினால் விவசாய நிலங்கள் மட்டுமின்றி மீன் வளமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.