வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நகராட்சி என்ஜினியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் லாலாப்பேட்டை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குழுவாக சென்றுள்ளனர்.
அதன்பின் அவர்கள் வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதி மறுத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து செல்வகுமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். அந்நேரம் அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக அவரது வீட்டில் தற்போது சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.